கோலாலம்பூர், அக்டோபர் 21 :
இங்குள்ள ஜாலான் டத்தோ ஹாஜி யூசூப் நகரில் உள்ள ஒரு கடை வீட்டின் இரு அறைகள் இன்று அதிகாலை தீயில் எரிந்து நாசமானதால், அங்கிருந்த மூவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நள்ளிரவு 1.31 மணிக்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து, செந்தூல் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம், ஹாங் துவா மற்றும் திதிவாங்சா ஆகிய மூன்று இயந்திரங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததாக செயல்பாட்டுத் தளபதி முகமட் அல்ஹாபிஸ் அஸ்முனி கூறினார்.
தீயை அணைக்கும் பணியில் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் மொத்தம் 32 பேர் ஈடுபட்டனர் என்றார்.
“ஒரு கடை வீட்டுக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள இரண்டு அறைகளில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் வசித்துவந்த 3 வெளிநாட்டு பிரஜைகள் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டனர்.
அதிகாலை 1.52 மணியளவில் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது என்றும் இந்த விபத்தில் குறித்த இரண்டு அறைகளும் 100 சதவீதம் தீயில் எரிந்து நாசமாகிவிட்டதாகவும், ஆனால் சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் இருப்பதாகவும்,” அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.