மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் கட்டட தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்; இருவர் காயம்

டுங்கூன், அக்டோபர் 24 :

பண்டார் புக்கிட் பேசிக்கு அருகிலுள்ள ஜாலான் ஜெராங்காவ்-ஜபோரின் 76வது கிலோமீட்டரில், இன்று நண்பகல் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் கட்டுமானத் தொழிலாளி ஒருவர் இறந்தார், மேலும் இருவர் காயமடைந்தனர்.

நண்பகல் 2.15 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், கிளாந்தான், ரந்தாவ் பாஞ்சாங்கைச் சேர்ந்த அஹ்மட் பஸ்ரி முஹமட் (32) என்பவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

டுங்கூன் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் பஹருடின் அப்துல்லா கூறுகையில், மூன்று வாகனங்கள் மோதியதாகவும் “பாதிக்கப்பட்டவரின் 41 வயது நண்பர் ஓட்டிச் சென்ற ஹோண்டா அக்கார்டு கார் ஜபோர் திசையிலிருந்து ஜெராங்காவ் நோக்கிச் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து எதிர் பாதையில் நுழைந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

“கோலா திரெங்கானுவின் கம்போங் பாக் கடாக்கைச் சேர்ந்த 56 வயதான அல்சா கார் ஓட்டுநர் வயிற்றில் காயம் அடைந்தார், அதே நேரத்தில் 52 வயதான பலநோக்கு வாகன ஓட்டுநருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றார்.

“பாதிக்கப்பட்டவரின் உடல் மேலதிக நடவடிக்கைக்காக டுங்கூன் மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டது, காயமடைந்தவர்களும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்,” என்று அவர் கூறினார்.

சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here