கோத்தா கினாபாலு, நவம்பர் 2 :
சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்படடவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 248 குடும்பங்களைச் சேர்ந்த 801பேராக இருந்த நிலையில், இன்று காலை 301 குடும்பங்களைச் சேர்ந்த 923 பேராக உயர்ந்துள்ளது.
சபா குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஐந்து மாவட்டங்களில் உள்ள 11 நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளதாக சபா மாநில பேரிடர் மேலாண்மை செயலகம் தெரிவித்துள்ளது.
“இன்று காலை சபாவின் பெரும்பாலான பகுதிகளில் வானிலை நன்றாக உள்ளது,” என்று அது இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் மலேசிய வானிலை ஆய்வு மையத்தின்படி, சபாவில் பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், சபா பொதுப்பணித் துறை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ஜாலான் அம்போய் சத்து, தேனோம் பகுதியில் உள்ள ஒரு பாலம் கடுமையாக சேதமடைந்துள்ளது அதனால் அந்த சாலை அனைத்து வகையான வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளது.
எனவே “சாலைப் பயனாளிகள் மாற்று வழிகளை ஜாலான் தேனோம்-ககோலா டோமானி, ஜாலான் அம்போய் 2 மற்றும் ஜாலான் சிண்டா மாட்டா ஆகியவற்றை பயன்படுத்தலாம்” என்று அது கூறியது.
ஜிம்பங்கா Km98.6 பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் Beaufort-Halogilat-Beaufort பாதை இயக்கப்படவில்லை என்றும், தண்ணீர் மட்டம் குறையத் தொடங்கும் போது சேவைகள் மீண்டும் தொடங்கும் என்றும் சபா ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
மற்றொரு பாதையான Tenom-Halogilat-Tenom சாலையில் Km130-137/7 நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தச் சாலையும் செயல்படவில்லை, தற்போது அங்கு பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.