பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 8 :
பிங்கிரான் தாசிக் கியாம்பாங்கில் உள்ள ஸ்ரீ செம்பகா அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், அக்கட்டடத்தில் விரிசல் ஏற்படத் தொடங்கியதால், மிகவும் பதற்றத்துடன் தங்கள் பாதுகாப்பு குறித்து அஞ்சுகின்றனர்.
பாதிக்கப்பட்ட கட்டடத்தையும் குடியிருப்பு வாசிகளையும் பார்வையிட்ட உலு சிலாங்கூருக்கான பார்ட்டி பாங்சா மலேசியா வேட்பாளர் ஹனிசா முகமட் தல்ஹா கூறுகையில் , குறித்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண சம்பந்தப்பட்ட நிறுவனங்களைத் தாம் தொடர்புகொள்வதாகக் கூறினார்.
“முன்னாள் அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இதற்குத் தீர்வு காண என்ன செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை, இருப்பினும் இந்தப் பிரச்சனை சமீபத்தில் எனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இந்த பிரச்சனைக்கு முன்னுரிமை அளிப்பதாக நான் உறுதியளிக்கிறேன்.
“ஒரு சட்டமியற்றுபவர் என்ற முறையில், எங்கள் வாக்காளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை நாம் இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
2018 மற்றும் 2020 க்கு இடையில் வீட்டுவசதிக்கு பொறுப்பான முன்னாள் சிலாங்கூர் நிர்வாக கவுன்சிலராக இருந்த ஹனிசா, தனக்கு வீட்டுவசதி பிரச்சனைகள் பற்றி நன்கு தெரியும் என்றார்.
இவ்வாறு விரிசல் விழுந்த கட்டடத்தில் பயத்துடன் வசிப்பது மிகவும் துன்பகரமானது என்று அவர் மேலும் கூறினார்.