புத்ரா ஜெயா, நவ.14-
வரும் 15ஆவது பொதுத்தேர்தலுக்குப் பின்னர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பே மீண்டும் நாட்டின் பிரதமராக வர வேண்டும் என மக்கள் விரும்புவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
எண்டியாவோர் -எம்.ஜி.சி. ஆய்வு நிறுவனம் 1,068 பேரிடம் மேற்கொண்ட ஓர் ஆய்வின்போது 22 விழுக்காட்டினர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பே மீண்டும் நாட்டின் பிரதமராக வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தீபகற்ப மலேசியாவிலுள்ள மக்களிடம் மேற்கொண்ட இந்த ஆய்வின்போது தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கெஅடிலான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பிரதமர் பதவிக்கு 20 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினுக்கு 16 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அம்னோவைச் சேர்ந்த கைரி ஜமாலுடினுக்கு 6 விழுக்காட்டு ஆதரவும் டத்தோஸ்ரீ ஹிஷாமுடினுக்கு 5 விழுக்காட்டு ஆதரவும் கிடைத்துள்ளதாகவும் அந்த ஆய்வின் வழி தெரிய வந்தது.
மற்ற தலைவர்கள் ஐந்து விழுக்காட்டிற்கும் குறைவான ஆதரவைப் பெற்றுள்ளதாகவும் அந்த ஆய்வு கூறியது. ஆனால், அவர்களின் பெயர்களை அந்த ஆய்வு வெளியிடவில்லை.
அதேவேளையில், 15ஆவது பொதுத்தேர்தலுக்குப் பின்னர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பிரதமராக நியமனம் செய்யப்பட வேண்டும் என 27 விழுக்காட்டினர் விரும்பியுள்ள வேளையில், அன்வாரைப் பிரதமராக நியமனம் செய்ய வேண்டும் என 26 விழுக்காட்டினரும் டான்ஸ்ரீ முஹிடின் யாசினை பிரதமராக நியமனம் செய்ய வேண்டும் என 21 விழுக்காட்டினரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இவர்களைத் தவிர்த்து, கைரி ஜமாலுடினுக்கு 10 விழுக்காட்டினரும் அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசானுக்கு 7 விழுக்காட்டினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேபோல் அம்னோ தலைமைப் பொறுப்பை டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஏற்க வேண்டும் என 31 விழுக்காட்டினரும் கைரி ஜமாலுடின் அப்பொறுப்பை ஏற்க வேண்டும் என 21 விழுக்காட்டினரும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அந்த ஆய்வு கூறியது.
இதில் ஹிஷாமுடினுக்கு 13 விழுக்காட்டு ஆதரவும் டத்தோஸ்ரீ முகமட் ஹசானுக்கு 10 விழுக்காடும் அமாட் ஸாஹிட்டிற்கு 4 விழுக்காட்டு ஆதரவும் கிடைத்துள்ளது.
இதனிடையே, வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் 15ஆவது பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பின்போது 72 விழுக்காட்டினர் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மலாய், சீன வாக்காளர்களில் 69 விழுக்காட்டினர் வாக்களிப்போம் எனவும் கூறியுள்ளனர்.