இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் பிரதமராகப் பதவியேற்றால் தாம் மேற்கொள்ளவிருக்கும் நான்கு உறுதிமொழிகளை பட்டியலிட்டுள்ளார்.
நாட்டின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக மக்களை ஒன்றுபடுத்துதல்;
பொருளாதார செழிப்பு மற்றும் தேசிய வளர்ச்சியை வலுப்படுத்துதல்
மத்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள விதிகளின்படி பிற மதங்களை ஓரங்கட்டாமல் இஸ்லாத்தின் புனிதத்தைப் பேணுதல்; மற்றும்
நாட்டின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்துதல்.
நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் செழுமைக்காக நிச்சயம் பாடுபடுதல் என்பதாகும்.
இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தன்னையும்,பாரிசான் நேஷனல் கட்சியையும் நம்பி வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். ஆகஸ்ட் 21, 2021 அன்று பிரதமராகப் பதவியேற்ற பிறகு, நாட்டை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்வது எளிதான காரியமாக இல்லை என்று இஸ்மாயில் கூறினார். மூன்று வருடகாலத்தில் மூன்று அரசாங்கங்களின் மாற்றம் நாட்டுக்கு ஒரு இருண்ட அத்தியாயமாக அமைந்தது என்றார்.
அந்த நேரத்தில், நாடு கோவிட் -19 தொற்றுநோயின் அச்சுறுத்தலை எதிர்கொண்டது. தினசரி நோயாளிகளின் எண்ணிக்கை பல ஆயிரங்களை எட்டியது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். மேலும், நாடு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது, வேலையின்மை பிரச்சனையும் அதிகரித்து வந்தது. பல வணிகத் துறைகளும் மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது மற்றும் மக்கள் தங்கள் வருமான ஆதாரங்களை இழந்தனர்.
ஆனால் இன்று நிலைமை மேம்பட்டுள்ளது உலக அரங்கில் மீண்டும் ஒரு வலுவான தேசமாக மதிக்கப்படுகிறது. தொடர்ந்து இதே போல் சிறப்பாக நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்வதே தனது பொறுப்பு என்று கூறினார். இஸ்மாயில் 2004 ஆம் ஆண்டு முதல் பெரா எம்.பி.யாக இருந்து வருகிறார்.