போர்ட்டிக்சன், நவம்பர் 23 :
60 வயதான இல்லத்தரசி ஒருவர் சமூக ஊடகங்களில் வந்த முதலீட்டு விளம்பரங்களை நம்பியதால், கிட்டத்தட்ட அரை மில்லியன் வெள்ளியை இழந்துள்ளார்.
போர்ட்டிக்சன் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ஐடி ஷாம் முஹமட் கூறுகையில், பாதிக்கப்பட்டவர் குறுகிய காலத்தில் ஏமாற்றப்பட்டதாகவும், அக்டோபர் 3 ஆம் தேதி, ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் அறியப்படாத ஒரு இணையத் தளத்திலிருந்து நிதி மேலாண்மை புத்தகங்களை இலவசமாக வழங்குவதாக பாதிக்கப்பட்டவருக்கு செய்தி வந்தது.
“பாதிக்கப்பட்டவர் ஃபேஸ்புக் மெசஞ்சரில் பரிமாறப்பட்ட வாட்ஸ்அப்பில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்ததாக நம்பப்படுகிறது, மேலும் அவர் ‘Family Discussion’ என்ற குழுவில் சேர்க்கப்பட்டார்.
“சேமிப்புக் கணக்கைத் திறப்பதற்காக “Forza” என்ற விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்யும்படி அவரிடம் கேட்கப்பட்டதுடன், அவர் சேமிப்பிலிருந்து பலன்களைப் பெறுவார் என்று உறுதியளிக்கப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் வாட்ஸ்அப் குழு ஆபரேட்டரால் கொடுக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண்ணில் பணத்தை வைப்புச் செய்து, குறித்த விண்ணப்பத்தில் பணத்தினை வைப்புச் செய்ததற்கான சீட்டை பதிவேற்ற வேண்டும் என்றார்.
“பாதிக்கப்பட்டவர் சமீபத்தில் நவம்பர் 1 முதல் நவம்பர் 17 வரை மொத்தம் RM476,100 மூலம் 17 பணப் பரிவர்த்தனைகளை வெவ்வேறு நிறுவனங்களின் பெயர்களில் இரண்டு உள்ளூர் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்தார்.
குறித்த விண்ணப்பத்தில் (Forza) சேமித்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என்று பாதிக்கப்பட்டவருக்கு தெரிவிக்கப்பட்டதாக ஐடி ஷாம் கூறினார்.
பின்னர் அவர் வட்டிப் பணத்தை எடுக்க விரும்பியபோது, தனது Forza விண்ணப்ப சேமிப்புக் கணக்குத் தடுக்கப்பட்டதைக் கண்டறிந்தார், மேலும் RM427,200 ஐ வைப்பிலிடுமாறு கேட்கப்பட்டார்.
இதன் பின்னர் பாதிக்கப்பட்ட நபர், தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்ததால், பணத்தை டெபாசிட் செய்வதை நிறுத்திவிட்டு, போர்ட்டிக்சனில் உள்ள தெலோக் கெமாங் காவல் நிலையத்திற்கு வந்து, நேற்று போலீசில் புகார் அளித்தார் என்று அவர் மேலும் கூறினார்.









