ஜோகூரிலுள்ள பொழுதுபோக்கு மையங்களில் நடந்த சோதனையின் போது போதைப்பொருள் பயன்படுத்திய இருவர் போலீசாரால் கைது

ஜோகூர் பாரு, நவம்பர் 26 :

இங்குள்ள பொழுதுபோக்கு மையத்தில் சூதாட்டம் மற்றும் இரகசிய சங்கங்கள் (D7) பிரிவினரால் இன்று சனிக்கிழமை (நவம்பர் 26) அதிகாலை 2.10 மணிக்கு நடத்தப்பட்ட “Ops Pusat Hiburan” நடவடிக்கையின் கீழ் போதைப்பொருள் உட்கொண்டதாக நம்பப்படும் இருவரை போலீசார் கைது செய்துள்ளதாக ஜோகூர் பாரு தெற்கு மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் ரவூப் செலாமாட் தெரிவித்தார்.

“நகரில் உள்ள இரண்டு பொழுதுபோக்கு மையங்களில் நடத்தப்பட்ட சோதனையில், அங்கு நாங்கள் 183 பார்வையாளர்களை ஆய்வு செய்துள்ளோம்.

“அவர்களில் 79 உள்ளூர் ஆண்கள் மற்றும் 16 உள்ளூர் பெண்கள், 58 வெளிநாட்டு ஆண்கள் மற்றும் 30 வெளிநாட்டு பெண்களும் அடங்குவர்.

“அனைத்து நபர்களும் 17 முதல் 53 வயதுக்குட்பட்டவர்கள்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் அவர்களிடம் மேற்கொண்ட சிறுநீர் பரிசோதனையில் 29 மற்றும் 47 வயதுடைய இரண்டு உள்ளூர் ஆண்களுக்கு ஆம்பெடமைன் இருப்பது தெரியவந்தது என்று ACP ரவூப் மேலும் கூறினார்.

“ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 15(1)(a) இன் கீழ் இருவரும் போதைப்பொருள் உட்கொண்டதற்காக கைது செய்யப்பட்டனர், இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது RM5,000 க்கு மிகாமல் அபராதம் என்பன விதிக்கப்படலாம்” என்று அவர் மேலும் கூறினார்.

இரண்டு வளாகங்களுக்கும் மேலாளர்களாக செயல்பட்ட ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகிய இரு நபர்களும் உரிமம் இல்லாமல் செயல்பட்டதற்காக ஜோகூர் பொழுதுபோக்கு இடங்கள் சட்டத்தின் பிரிவு 6(2) மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 11(2) ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் ஒரு பொழுதுபோக்கு மையத்தை இயக்குவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here