உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் 2ஆவது சுற்றுக்கு (ரவுண்ட் 16) தகுதி பெறும்.
அதன்படி குரூப் ‘எப்’ பிரிவில் நடைபெற்ற போட்டியில் கனடா, மொராக்கோ அணிகள் மோதின. பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் 4ஆவது நிமிடத்தில் மொராக்கோ வீரர் ஹக்கீம் சீயேஸ் தனது அணிக்கான முதல் கோலை அடித்தார். அவரைத் தொடர்ந்து அணியின் சக வீரர் யூசுப் என் நெஸ்ரி ஆட்டத்தில் 23ஆவது நிமிடத்தில் அணிக்கான இரண்டாவது கோலை பதிவு செய்து அசத்தினார்.
இதற்கு பதிலடியாக ஆட்டத்தின் 40ஆவது நிமிடத்தில் கனடா அணி வீரர் நெயீப் அகூர்டு தனது அணிக்கான முதல் கோலை அடித்தார். தொடர்ந்து பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்க எடுத்து கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன.
முடிவில் கனடா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அணி வீழ்த்தியதுடன், 36 ஆண்டுகளுக்குப் பிறகு 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) தகுதி பெற்றுள்ளது. இதன்படி உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் எப் பிரிவில் மொராக்கோ மற்றும் குரேஷியா அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) முன்னேறி உள்ளது.