புத்ராஜெயா, டிசம்பர் 5 :
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் டான் ஶ்ரீ அசாம் பாக்கிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மிரட்டல் விடுத்தாகக் கூறப்படும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு முஹமட் ரஃபிசி ராம்லி மறுப்புத் தெரிவித்தார்.
தமது அறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகவும், இது சில அரசியல் நோக்கத்திற்காக திசை திருப்பப்பட்டிருக்கலாம் என்றும் அவர் மேலும் கூறினார்.
எந்த ஒரு தலையீடும் இல்லாமல், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் சுதந்திரமாக இருப்பதை உறுதிச் செய்வதில், ஒற்றுமை அரசாங்கம் நிச்சயம் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதே, 15-வது பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது தான் வெளியிட்ட அறிக்கையின் உண்மையான அர்த்தம் என்று ரஃபிசி ராம்லி கூறினார்.
”அசாம் பாக்கி மட்டுமல்ல, யாராக இருந்தாலும், ஏன் நானாக இருந்தாலும்கூட, நாம் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். காரணம், அதில் தலையீடு இல்லை என்பதை உறுதி செய்வோம் என்பதுடன், அனைத்து நிறுவனங்களும் சுதந்திரமாக செயல்படுவதுடன் அனைவரும் சரியான பாதையில் செயல்பட வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
முன்னதாக, கடந்த 15-வது பொதுத் தேர்தல் பிரச்சாரக் காலக் கட்டத்தில், தமது நிறுவனமான INVOKE SOLUTION-னில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை நடத்தியதுடன், ஊழியர்களை கைது செய்து ஏழு மணி நேரம் தடுத்து வைத்திருந்த காரணத்தினால், டான் ஶ்ரீ அசாம் பாக்கிக்கு எதிராக ரஃபிசி குறித்த அறிக்கையை வெளியிட்டதாக ஊடங்கங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.