உலகக்கோப்பை கால்பந்து: போர்ச்சுக்கல்லை வீழ்த்தி முதன் முறையாக அரை இறுதிக்கு முன்னேறிய மொராக்கோ அணி

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று இரவு 8.30 மணிக்கு அல்துமாமா மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மொராக்கோ – போர்ச்சுகல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முன்னதாக 36 வருடங்களுக்கு முன்பு மெக்சிகோவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையை பெற்றிருந்தது மொராக்கோ. தற்போது கத்தார் உலகக் கோப்பையில் முதன் முறையாக அரை இறுதிக்கு தகுதி பெறும் ஆப்பிரிக்க அணி என்ற சாதனையை படைக்க மொராக்கோவுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தது.

இதேபோல் போர்ச்சுகல் அணியானது லீக் சுற்றில் கானாவை 3-2 என்ற கோல் கணக்கிலும், உருகுவேவை 2-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது. கடைசி ஆட்டத்தில் தென் கொரியாவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது. கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் சுவிட்சர்லாந்தை 6-1 என்ற கோல் கணக்கில் பந்தாடி இருந்தது.

இந்நிலையில் பரபரப்பாக இன்று துவங்கிய போட்டியின் முதல் பாதியில் மொரோக்கோ அணி வீரர் யூசுப் என் நெஸ்ரி ஆட்டத்தின் 42ஆவது நிமிடத்தில் தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார். இதன்மூலம் ஆட்டத்தின் முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் மொரோக்கோ அணி முன்னிலை வகித்தது.

இதனைத்தொடர்ந்து அனல் பறந்த போட்டியின் இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. பின்னர் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதன்மூலம் போர்ச்சுக்கல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மொராக்கோ அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here