கோத்தா திங்கியிலுள்ள ஒரு வணிக வளாகத்தில் உள்ள ஒரு உணவகம் ஒன்றின் சமையல்காரர், சிறுவன் ஒருவனை உணவகத்தின் சமையல் செய்யும் பகுதியில் சிறுநீர் கழிக்க அனுமதித்தது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதால், உடனடியாக உணவகத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்று ஜோகூர் மாநில சுகாதாரம் மற்றும் ஒற்றுமைக் குழுவின் தலைவர், லிங் தியான் சூன் தெரிவித்தார்.
நேற்றுக் காலை 11.30 மணியளவில் தகவல் கிடைத்ததும், அவ்விடத்தை விசாரணை மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ள கோத்தா திங்கி மாவட்ட சுகாதார அலுவலகத்திலிருந்து ஒரு குழு அனுப்பப்பட்டது.
அந்த வளாகம் வெளிநாட்டவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.
“அங்கு வேலை செய்யும் நால்வரிடம் வேலைக்கான பயிற்சி சான்றிதழ்கள் இல்லை மற்றும் ஒருவருக்கு டைபாய்டு (typhoid injection) தடுப்பூசி போடப்படாததும் கண்டறியப்பட்டது.
மேலும் வளாக ஆய்வு மதிப்பெண் 47.12 சதவீதமாக இருந்தது. உணவுச் சட்டம் 1983ன் பிரிவு 12ன் கீழ் சுகாதார சீர்கேடாக இருந்ததால் உடனடியாக உணவகத்தை மூடுமாறு ஒரு உத்தரவும், உணவுச் சட்டம் 1983ன் பிரிவு 10(1)ன் கீழ் சுத்தம் செய்யும் உத்தரவும் வழங்கப்பட்டது என்றார்.
“உணவு சுகாதார விதிமுறைகள் 2009 இன் கீழ் வளாகத்தை பதிவு செய்யாததற்காகவும், வளாகம் நல்ல மற்றும் தூய்மையான நிலையில் இருப்பதை உறுதிசெய்யத் தவறியதற்காக அதன் உரிமையாளருக்கு எதிராக அபராதமும் விதிக்கப்பட்டது என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.