பத்தாங் காலி, கோஹ்டாங் ராயாவில் உள்ள The Father’s Organic Farm campsite பண்ணை முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக, கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி தொடங்கிய தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை இன்று நண்பகலுடன் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது.
அந்தச் சோக சம்பவத்தில் காணாமல் போனவர்கள் யாரும் இல்லை என்பதை போலீசார் உறுதி செய்ததை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய போலீஸ் படை தலைவர், டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்தார்.
“இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களின் மொத்த எண்ணிக்கை 92 என்றும், அவர்களில் 31 பேர் உயிரிழந்த நிலையில் மொத்தம் 61 பேர் பாதுகாப்பாக உயிருடன் மீட்கப்பட்டனர்” என்றும் அவர் கூறினார்.
“மிக மோசமான மழையுடனான காலநிலையில் மேற்கொள்ளப்பட்ட சவால்கள் மிகுந்த இந்த தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் பொதுப்பணித் துறை, ஆய்வு மற்றும் வரைபடத் துறை, கனிமங்கள் மற்றும் புவி அறிவியல் துறை மற்றும் உலு சிலாங்கூர் நகராட்சி கவுன்சில் போன்ற நிறுவனங்கள் இன்னும் தொழில்நுட்பப் பணிகளை அந்த இடத்தில் நடத்தி வருகின்றன” என்று அவர் இன்று அங்கு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இதனிடையே தேசிய பாதுகாப்பு மன்றத்தின் கட்டளையை ஏற்று, தமது பணிகளை திறம்பட செய்த ஒவ்வொரு உறுப்பினருக்கும் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார், அத்தோடு அனைத்து அரசு சார் நிறுவனங்களும் ஒன்றாக சேர்ந்து, தன்னலமற்ற சேவையை வழங்கியதை காணமுடிந்ததாகவும், இது சிறந்த ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டு என்றும் அவர் கூறினார்.