திரெங்கானு மாநிலம் முழுவதும் மொத்தம் 74 பள்ளிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக திரெங்கானு மாநில கல்வித் துறை இயக்குநர் அப்துல் முய் நகா தெரிவித்தார்.
அவற்றில் 61 ஆரம்பப் பள்ளிகள் மற்றும் 13 இடைநிலைப் பள்ளிகள் என்பன அடங்குவதாகவும், உலு திரெங்கானு மாவட்டத்தில் மிக அதிகமாக 17 பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன, அதைத் தொடர்ந்து டுங்கூன் (11), செத்தியூ (10), பெசூட் (9), கோலா நெரஸ் (8) , கோல திரெங்கானு (8), கெமாமன் (7) மற்றும் மராங் (4) என வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
குறித்த பாடசாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் இருந்து மீண்டு, தற்போது துப்புரவு பணிகள் நடைபெற்று வருவதாக அவர் மேலும் கூறினார்.
“இந்த மோசமான வெள்ளத்தால் பள்ளியிலிருந்த கணினிகள், மடிக்கணினிகள், பாடப்புத்தகங்கள், நாற்காலிகள் மற்றும் மேசைகள் உட்பட பல பெறுமதிமிக்க பொருட்கள் சேதமடைந்தன.
இதற்கிடையில், 143 பள்ளிகள் தற்காலிக நிவாரண மையங்களாக மாற்றப்பட்டுள்ளன, இன்று காலை 10 மணி நிலவரப்படி அவற்றில் 135 பள்ளிகளில் தங்கியிருந்த பாதிக்கப்பட்ட மக்கள் வெளியேறியதைத் தொடர்ந்து, அங்கு இயங்கி வந்த நிவாரண மையங்கள் மூடப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.