28 பயணிகளுடன் சென்ற விரைவுப் பேருந்து கவிழ்ந்ததில் இருவர் காயம்

ரவாங்:

28 பயணிகளுடன் சென்ற விரைவுப் பேருந்து, தெற்கு திசையில் உள்ள ரவாங் டோல் பிளாசா அருகே இன்று அதிகாலை சறுக்கி கவிழ்ந்ததில், இருவர் காயமடைந்ததாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சிலாங்கூர் மாநில இயக்குநர், டத்தோ நோராஸாம் காமிஸ் தெரிவித்தார்.

அதிகாலை 1.46 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பாக தமது துறைக்கு அவசர அழைப்பு வந்தது. அதனடிப்படையில், ரவாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து சில இயந்திரங்களுடன் மொத்தம் 10 உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

“அந்தக் குழு சம்பவ இடத்திற்கு வந்தவுடன், 30 பயணிகளை ஏற்றிச் சென்ற விரைவுப் பேருந்து விபத்துக்குள்ளானதாக கண்டறிந்தனர்.

இந்த விபத்தில் விரைவுப் பேருந்து சுங்கச்சாவடியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள நெடுஞ்சாலையின் ஓரத்தில் மோதி, கவிழ்ந்தது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சம்பவத்தின் போது குறித்த பேருந்தில் 16 ஆண்கள், 12 பெண்கள் மற்றும் இரண்டு சிறுமிகள் இருந்ததாக நோராஸாம் கூறினார்.

இந்த விபத்தில் 65 வயதான தாய்லாந்து நாட்டு மூதாட்டி ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது, மற்றோரு இந்தோனேசிய சிறுமிக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here