கோலாலம்பூர்:
ரவாங்கின் பத்து அராங்கிலுள்ள புத்ரி சென்டர் பூங்காவிலுள்ள குளத்தில் மூழ்கி, இந்திய வம்சாவளி மலேசியர் ஒருவர் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் காலை 10.26 மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், உடனே அராங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, சிலாங்கூர் மாநில தீயணைப்பு துறை இயக்குநர், நோராசாம் காமிஸ் தெரிவித்தார்.
தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் மேற்கொண்ட தேடல் நடவடிக்கையில், இன்று நண்பகல் 1.33 மணியளவில் குறித்த குளத்தில் 3 மீட்டர் ஆழத்திலிருந்து குறித்த ஆடவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மேலும் குறித்த ஆடவர் குடிபோதையில் குளத்தில் விழுந்ததாக நம்பப்படுவதாகவும் அவர் கூறினார்.
உயிரிழந்த ஆடவர் சி.அரவிந்த் ராஜ், 25 என அடையாளம் காணப்பட்டார். சடலம் சுங்கை பூலோ மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று நோராசாம் கூறினார்.