கோலாலம்பூர்:
தேசிய கடற்பரப்பின் பாதுகாப்பை வலுப்படுத்த, அரச மலேசிய கடற்படையின் LCS எனப்படும் லிட்டரல் போர்க் கப்பல் கட்டுமான திட்டம், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள், நிறைவடைவதை தற்காப்பு அமைச்சு உறுதி செய்யும் என்று அதன் அமைச்சர், டத்தோ ஶ்ரீ முகமட் ஹசன் தெரிவித்தார்.
2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாவது கப்பல் நாட்டின் கடல் பகுதியில் நிறுத்தப்படும் என்று அவர் கூறினார்.
இதற்கு முன்னர், LCSஇல் திட்டமிடப்பட்டிருந்த ஆறு கப்பல்களில் குறைந்தது நான்கு கப்பல்களின் கட்டுமானத்தை நிறைவு செய்வதில் தற்போது கவனம் செலுத்தப்படும் என்றும் முஹமட் ஹசான் தெரிவித்தார்.
”கப்பல்களின் கட்டுமானத்தை நிறைவு செய்வது எங்களின் இலக்காகும். முற்றிலும் வணிக ரீதியில் நாங்கள் கவனம் செலுத்துவோம். இந்தக் கப்பல்கள் நிறைவு செய்யப்படுவதை நாங்கள் உறுதிசெய்வோம். ஆறு முடியாவிட்டாலும் கூட நான்கு நிறைவுசெய்யப்பட்டால் கூட போதுமானது,” என்றார் அவர்.
விஸ்மா பெர்தாஹானான் அரங்கில், இன்று வியாழக்கிழமை, தற்காப்பு அமைச்சின் புத்தாண்டு நிகழ்ச்சியின்போது முஹமட் ஹசான் அவ்வாறு கூறினார்.
முன்னதாக, தடங்கல் ஏற்பட்ட எல்.சி.எஸ் திட்டத்தின் உண்மை நிலவரம் மற்றும் அதை நிறைவு செய்வது குறித்து நிதி அமைச்சு மற்றும் பொருளாதார அமைச்சுக்கு விவாத அறிக்கையை தற்காப்பு அமைச்சு சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
608 கோடியே 30 இலட்சம் ரிங்கிட்டிற்கும் மேல் அரசாங்கம் செலுத்தியப் பின்னரும், இன்னும் ஒரு LCS கப்பலின் கட்டுமானம் நிறைவு செய்யாதது தெரிய வந்திருப்பதாக, தேசிய பொது கணக்குக்குழு பி.ஏ.சி கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்த விஷயம் அம்பலமானது.