கோலாலம்பூர்:
கட்சியின் சட்ட ஒழுங்கு விதியை மீறியதாக, ஆராவ் தொகுதி அம்னோ தலைவர் உடனடியாக நீக்கப்பட்டார்.
அத்தொகுதிக்கான அதன் புதிய தலைவர் கூடிய விரைவில் நியமிக்கப்படுவார் என்று, அம்னோ தொடர்புப் பிரிவுத் தலைவர் இஷாம் ஜாலில் தெரிவித்தார்.
நேற்றிரவு நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
டத்தோ ஸ்ரீ தாஜுதீன் அப்துல் ரஹ்மான், கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து நீக்கப்படுவது தொடர்பான மேல்முறையீடு நிராகரிக்கப்படுவதாகவும், அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதால், அது நேற்று தொடங்கி அமலுக்கு வந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
2022-ஆம் ஆண்டு அம்னோ பொதுப் பேரவைக்கு நம்பிக்கை கூட்டணியின் பிரதிநிதிகளை அழைப்பது குறித்து, அக்கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று இஷாம் ஜாலில் குறிப்பிட்டார்.
மேலும் நடப்பு அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, தமது தலைவர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள தாம் தயாராக இருப்பதாக கூறியிருந்தாலும், கட்சியின் உயர் பதவிகளுக்கான தேர்தல் குறித்து அதாவது அம்னோவின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகள் பற்றி அக்கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.