கடந்த ஞாயிற்றுக்கிழமை, Jalan Enggang, Taman Keramat இல் உள்ள ஒரு பலசரக்கு கடையில் கொள்ளையடித்து 5,000 ரிங்கிட் நஷ்டம் ஏற்படுத்திய வழக்கில் தொடர்புடையதாக நம்பப்படும் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இரவு 9.25 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், மூன்று சந்தேக நபர்களும், தங்களை சுங்க அதிகாரிகளாகக் காட்டிக் கொண்டு, கடைக்கு வந்து சோதனை நடத்துவது போல் நடித்து, பணத்துடன் தப்பிச் சென்றுள்ளதாக, அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபாரூக் எஷாக் தெரிவித்துள்ளார்.
“இருப்பினும், சந்தேக நபர்களில் ஒருவரை, தாமன் கெரமாட் பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர் ஆகியோர் சம்பவம் நடந்த அன்றே பிடித்ததாகவும், பின்னர் இரவு 9.45 மணியளவில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தவுடன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறினார்.
“கார் உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் உதவியாளராக பணிபுரியும் குறித்த சந்தேக நபருக்கு, போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் உட்பட மூன்று முந்தைய குற்றப் பதிவுகள் இருந்தது முதற்கட்ட சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் அவரும் போதைப்பொருள் எடுத்திருப்பது உறுதியானது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் கொள்ளையின் போது பயன்படுத்தியதாக நம்பப்படும் மடிப்பு கத்தி, உடைகள் மற்றும் வாக்கி டாக்கி செட் ஆகியவையும் போலீசாரால் கைப்பற்றப்பட்டன.
முதலாவது சந்தேக நபரின் விசாரணை அடிப்படையில், நேற்று இரவு 8.45 முதல் 9.50 மணி வரை, கோத்தா வாரிசன் அடுக்குமாடி குடியிருப்பு, செலாயாங் மற்றும் பண்டார் ஸ்ரீ டாமான்சாராவைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட தனித்தனி சோதனைகளில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டதாக முகமட் பாரூக் கூறினார்.
32 வயதுடைய ஒரு வேலையற்ற சந்தேக நபருக்கு எட்டு முந்தைய குற்றப் பதிவுகளும், லாரி ஓட்டுநரான மற்றைய சந்தேகநபர் 20 முந்தைய குற்றப் பதிவுகளையும் கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் குற்றவியல் சட்டம் பிரிவு 394ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.