அதிகரித்துள்ள மக்களின் வாழ்க்கை செலவினத்தை சமாளிக்க தமது எதிர்காலத்திற்கான சேமிப்பை அதாவது ஊழியர் சேமலாப நிதி வாரியத்தின் (EPF) சந்தாதாரர்கள் பணத்தை திரும்பப் பெற அனுமதிப்பதை விட அரசாங்கம், வேறு வழியைக் கண்டறிவது சிறந்தது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக வருமானம் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது வருமானத்தை இழந்தவர்களுக்கு உதவுவதற்கு அரசாங்கம் மற்ற பயனுள்ள வழிமுறைகளை தேடுவது நல்லது என்றும் அன்வார் கூறினார்.
“பெரும்பாலான EPF பங்களிப்பாளர்களிடம் மிகச் சிறிய அளவிலான சேமிப்புகள் இருப்பதால், அரசாங்கம் அவற்றை திரும்பப் பெற அனுமதித்தால், அது அவர்களின் எதிர்காலத்தையே பாதிக்கும் என்று தான் மிகவும் கவலையடைவதாகவும்” பிரதமர் இன்று பெர்லிஸ் அரசு ஊழியர்களுக்கான 2023 சந்திப்பில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
நேற்று,EPF நிதியிலிருந்து RM10,000 முதல் RM30,000 வரையான தொகையை அதன் சந்தாதாரர்களுக்கு வழங்க அனுமதிக்குமாறு அரசாங்கத்தை பரிசீலிக்கும்படி, மலேசிய இயக்கவாதிகள் மக்கள் அமைப்பான Pertubuhan Aktivis Rakyat Malaysia (ProRakyat) நேற்று அழைப்புவிடுத்தது தொடர்பில், அவர் இவ்வாறு கூறினார்.