துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடிக்கு எதிரான நம்பிக்கை மோசடி, ஊழல் மற்றும் Yayasan Akalbudi (YAB) நிறுவன நிதி சம்பந்தப்பட்ட பணமோசடி தொடர்பான வழக்கு விசாரணை, வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதி, டத்தோ கொலின் லாரன்ஸ் செக்வேரா குறித்த வழக்கு விசாரணையை இன்று ஒத்திவைத்தார். இதற்கு இரு தரப்புக்களும் ஒத்துக்கொண்டதன்படி, வழக்கு விசாரணையை ஏப்ரல் 10-13, மே 15-18, ஜூன் 12-15, ஜூலை 24-27, ஆகஸ்டு 1-3, 7-10 மற்றும் 21-24 ஆகிய தேதிகளில் நடாத்த நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சராகவும் இருக்கும் 70 வயதான அஹ்மட் ஜாஹிட் , 12 குற்றவியல் நம்பிக்கை மோசடி , 8 ஊழல் மற்றும் 27 YAB க்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ரிங்கிட் சம்பந்தப்பட்ட பணமோசடி என மொத்தம் 47 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.









