நேற்று இஸ்லாமியர்களின் புனித நூலான அல்-குரானை எரித்த சுவீடன் நாட்டு அரசியல்வாதி ரஸ்மஸ் பலுடானின் காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு மலேசிய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் அதைக் கண்டிக்கும் முகமாக இதுவரை சுவீடன் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு மலேசியா வருத்தம் தெரிவிப்பதாக, வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர். ஜாம்ப்ரி அப்துல் காதிர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
நேற்று, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் சுவீடனின் புனித நூலான அல்- குரானின் பிரதியை எரித்த பலுடானின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
டேனிஷ் குடியுரிமை பெற்ற அந்த அரசியல்வாதியின் அடாவடித்தனமான செயல் மிகவும் தீவிரமான வெறுப்புணர்வைத் தூண்டுவதாக பல முஸ்லிம் நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.
NATO வட அட்லாண்டிக் உடன்படிக்கையில் சுவீடன் அங்கத்துவம் பெறுவதற்கு துருக்கியே எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, பலுடான் துருக்கியே நாட்டு தூதரகத்திற்கு முன்னால் நூற்றுக்கணக்கானருடன் இணைந்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில், அவர் அல்-குரானை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.