அடுத்த வார இறுதியில் நடக்கும் தைப்பூச கொண்டாட்டத்தை முன்னிட்டு, பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை முன்னதாகவே நிறைவேற்ற தொடங்கியுள்ளனர்.
வரும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கோயிலில் கூட்டம் நிரம்பி வழியும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், குடடத்தை தவிர்க்க பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை முன்னதாகவே செய்ய தொடங்கி விட்டதாக பத்துமலை ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தான அறங்காவலர், டத்தோ என். சிவக்குமார் தெரிவித்தார்.
” சீனப் புத்தாண்டு மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் பால் குடம், பன்னீர் காவடி மற்றும் தலை முடி காணிக்கை போன்ற நேர்த்திக் கடன்களை செய்து தங்கள் பிரார்த்தனைகளை செய்கிறார்கள் என்றும், அவர்களில் பெரும்பாலானோர் தைப்பூச திருவிழாவின் போது கூட்டத்தைத் தவிர்க்க விரும்புவதாலும், இறைவனை நிதானமாக வணங்குவதற்காகவும் முன்னதாகவே பத்துமலையில் கூடுவதாகவும் ,” அவர் கூறினார்.
கோவிட்-19 விதிகள் தளர்த்தப்பட்டதால், இம்முறை வியாபாரிகளும் அதிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாலும் கோயில் மைதானத்தில் அதிக கூட்டம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வார இறுதி நாட்களில் அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை நடத்த அனுமதிக்கும் முகமாக, கோயில் அதன் செயல்பாட்டு நேரத்தை நீட்டித்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
மலேசியாவில் தைப்பூசம் எதிர்வரும் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.