நேற்று (ஜனவரி 30) ஜாலான் மூவார்-பாரிட் சுலோங் என்ற இடத்தில் காட்டுப்பன்றி மீது கார் மோதியதில் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் காயமடைந்ததாக, மூவார் தீயணைப்பு நிலையத்தின் தலைவர் ஷரிசல் மொக்தார் கூறினார்.
குறித்த சம்பவம் குறித்து, ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயலகத்திற்கு அதிகாலை 1.40 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், உடனே சம்பவ இடத்திற்கு மூவார் தீயணைப்பு மற்றும் மீட்பு குழு உறுப்பினர்கள் விரைந்ததாகவும், அவர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
திடீரென சாலையில் காட்டுப்பன்றி வந்ததாகவும், அதன் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் முயற்சித்ததால் கார் சாலையின் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்றும், அதன் ஓட்டுநர் முகமட் ஹலித் ஷாஹித், 59, என்பவரது தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும் அவருடன் பயணித்த ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் சிறிய காயங்களுக்கு ஆளானதாக ஷரிசல் கூறினார்.
“பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக இங்குள்ள சுல்தானா பாத்திமா சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்,” என்றார்.