மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்களின் கஷ்டமான நிலை குறித்து, பொதுமக்கள் அதிக சகிப்புத்தன்மையுடன் இருக்குமாறு சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா வலியுறுத்தியுள்ளார்.
“உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள் மனதளவிலும் சரியாக இருப்பார்கள் என நாம் முடிவெடுக்கமுடியாது”. “எனவே, மனச்சோர்வு மற்றும் கடுமையான பதட்டம் போன்ற மனநலப் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்களை ஒதுக்கிவைக்கவோ அல்லது களங்கப்படுத்தவோ வேண்டாம் என்று அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று, சுல்தான் ஷராபுதீன் இன்று வியாழக்கிழமை (பிப் 9) தஞ்சோங் காராங் மருத்துவமனையின் தொடக்க விழாவில் உரையாற்றும் போது கூறினார்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களைப் போலவே மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். “மனநலப் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள், தேவையான சிகிச்சையைப் பெற மருத்துவ நிபுணர்களிடம் பரிந்துரைக்கவும் நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று சுல்தான் கூறினார்.
மூத்த குடிமக்கள் மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ளவர்கள் அவர்களின் உடல்நலம் மற்றும் ஆறுதல் தரும் விஷயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் சுல்தான் மேலும் கூறினார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கிய தஞ்சோங் காராங் மருத்துவமனையின் மூலம், அருகிலுள்ள மக்கள் சிறந்த மற்றும் பயனுள்ள மருத்துவ வசதிகளைப் பெற முடியும் என்றும் சுல்தான் நம்பிக்கை தெரிவித்தார்.









