KL சென்ட்ரலில் இருந்து நாடாளுமன்றத்திற்கு செல்லும் இலவச பேருந்து சேவை இன்று திங்கள்கிழமை (பிப் 20) தொடங்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
இது நாடாளுமன்ற வாகன நிறுத்துமிட நெரிசலைக் குறைக்கும் அதே வேளையில், பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டம் என்று அவர் கூறினார்.
“அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஊடகங்கத்துறையினர் ஆகியோருக்கு நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு மாற்றுப் போக்குவரத்து வசதியை வழங்க விரும்புகிறோம்.
ஏனெனில், நாடாளுமன்றத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம் குறைவாக இருக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.
“சராசரியாக, ஒரு நாளைக்கு சுமார் 2,000 கார்கள் நாடாளுமன்ற அமர்வின் போது அவ் வளாகத்திற்குள் நுழைகின்றன, ஆனால் 500 க்கும் குறைவான பார்க்கிங் இடங்களே அங்குள்ளன .
இந்த முன்னோடித் திட்டத்திற்காக 30 இருக்கைகள் கொண்ட இரண்டு Rapid KL பேருந்துகளை பயன்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டதாகவும், இதற்கு போக்குவரத்து அமைச்சகம் ஒரு நாளைக்கு RM1,600-ஐ செலுத்தும் என்றும் லோக் கூறினார்.
இந்தப் பேருந்து நாடாளுமன்றத்திற்குச் செல்வதற்கு முன் தாவரவியல் பூங்காவிற்கு அடுத்துள்ள கார் நிறுத்துமிடத்திற்கு அருகில் உள்ள இடத்தில் அதாவது ஒரு நிறுத்தத்தில் மட்டுமே நிறுத்தப்படும் என்று அவர் கூறினார்.
காலை 8 மணி முதல் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்படும் வரை ஷட்டில் பஸ் சேவை இயங்கும் என்றும் அவர் கூறினார்.








