தமிழ்நாட்டின் சென்னையில் இன்று லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் ஊழியர்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறினர்.
சென்னையில் இன்று காலை 10.15 மணிக்கு திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் லாயிட்ஸ் ரோடு அருகே நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து வெளியே ஓடிவந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அப்பகுதியில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுமா என்ற அச்சத்தில் மக்கள் இருக்கின்றனர். ஆனால் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் எத்தனை புள்ளிகள் பதிவானது என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் கட்டிடம் குலுங்கியதா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதே நேரத்தில் சென்னையில் நில அதிர்வு ஏற்பட மெட்ரோ ரயில் பணிகள் காரணமல்ல என ரயில்வே நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் எதுவும் தற்போது நடைபெறவில்லை எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதே நேரத்தில் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் போர் போடும் பணி நடைபெற்று வருவதாகவும் இதனால் அருகில் இருந்த கட்டிடங்கள் குலுங்கியதாகவும், இதை நிலநடுக்கம் என நினைத்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் வெளியே ஓடி வந்ததாகவும் கூறப்படுகிறது.