கூலாயில் நபர் ஒருவரை வெட்டிய வழக்கில் தொடர்புடையதாக நம்பப்படும் அறுவர் கைது

கூலாயின் ஜாலான் சேனாய் உத்தாமாவில் உள்ள ஒரு உணவகத்தில், 44 வயது நபர் ஒருவரை வெட்டிய வழக்கு விசாரணை தொடர்பில் ஆறு பேரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 25) அதிகாலை 1.30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ்காரர் அளித்த புகாரின் அடிப்படையில், சந்தேக நபர்களை கைது செய்ததாகவும் கூலாய் மாவட்ட காவல்துறை தலைவர், டோக் பேங் யோவ் தெரிவித்தார்.

“சந்தேக நபர்கள் அனைவரும் 23 முதல் 42 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் விசாரணைகளுக்கு உதவுவதற்காக அவர்கள் அனைவரும் மார்ச் 2 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்றும் அவர் இன்று திங்கட்கிழமை (பிப்ரவரி 27) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவருக்கு வயிறு மற்றும் தலையில் காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர் சுல்தானா அமினா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரின் உடல் நிலை தற்போது சீராக இருப்பதாகவும் டோக் கூறினார்.

“பாதிக்கப்பட்டவருக்கும் கைது செய்யப்பட்டவர்களுக்கு இடையே ஏற்பட்ட தவறான புரிதலால் இந்த சண்டை ஏற்பட்டது என்பது ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது, மேலும் ஆயுதங்களுடன் கலவரம் செய்ததற்கான குற்றவியல் சட்டம், பிரிவு 148 இன் கீழ் வழக்கு விசாரணைகளை போலீசார் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here