நேற்று செவ்வாய்க்கிழமை (பிப்.28) காணாமல் போனதாகக் கூறப்படும் ஜோகூர் மீன்வளத் துறையைச் சேர்ந்த நான்கு ஊழியர்கள், இன்று புதன்கிழமை (மார்ச் 1) பிற்பகல் இந்தோனேசியாவின் பாத்தாமுக்கு அருகிலுள்ள பூலாவ் கெப்பலாஜெராயிலிருந்து ஒரு கடல் மைல் தொலைவில், தங்கள் படகில் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் இன்று நண்பகல் 1.45 மணியளவில் இந்தோனேசிய நாட்டு இராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஜோகூர் கடல்சார் இயக்குனர் முதல் அட்மிரல் நூருல் ஹிசாம் ஜகாரியா தெரிவித்தார்.
“அவர்கள் சென்ற படகு அவர்கள் கடைசியாக நின்றதாக அறியப்பட்ட இடத்திலிருந்து சுமார் 13 கடல் மைல் தொலைவில் உள்ள இந்தோனேசியக் கடலுக்குள் செல்வதற்கு முன்பு படகின் பேட்டரி சேதம் அடைந்ததாக நம்பப்படுகிறது”.
“தற்போது இந்தோனேசிய நாட்டு இராணுவத்தினரால் படகு பழுதுபார்க்கப்படுவதாகவும், அதை மலேசியாவிற்குள் கொண்டுவருவதற்கான பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்” என்று அவர் மேலும் கூறினார்.