கடந்த திங்கள்கிழமை (பிப்ரவரி 27) முதல் தொடர்ந்து பெய்து வரும் தொடர் கன மழையைத் தொடர்ந்து, ஜோகூரில் உள்ள நான்கு அணைகளில் நீர் மட்டம் அபாயநிலையில் பதிவாகியுள்ளதாக மாநில செயற்குழு உறுப்பினர் முகமட் ஃபாஸ்லி முகமட் சாலே தெரிவித்தார்.
அபாய அளவை பதிவுசெய்த அணைகளாக செம்ப்ராங், பெக்காக், லாபோங் மற்றும் மாச்சாப் ஆகிய நான்கு அணைகளும் அடங்குவதற்காக ஜோகூர் பணிகள், போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவருமான அவர் கூறினார்.
இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 3) காலை 7.30 மணி நிலவரப்படி, செம்ப்ராங் அணையின் தற்போதைய நீர்த்தேக்க அளவு 12.18 மீட்டராகப் பதிவாகியுள்ளது, இதன் சாதாரண நீர்த்தேக்க அளவான 8.5 மீட்டரைத் தாண்டியுள்ளது,” என்று அவர் கூறினார்.
பெக்கோக் அணையின் தற்போதைய நீர்த்தேக்க மட்டம் 20.75 மீ ஆக உள்ளது, அதே நேரத்தில் அதன் சாதாரண நீர்த்தேக்க மட்டம் 16 மீட்டராகும், இருந்தாலும் அணையில் இருந்து தண்ணீர் இதுவரை திறக்கப்படவில்லை.
அதே நேரத்தில் மாச்சாப் அணையின் சாதாரண நீர்மட்டம் 15.85 மீட்டர் என்றும் அதன் தற்போதைய அளவு 17.45 மீ ஆக உள்ளது என்றும், இந்த அணையில் 25.5 மிமீ மழை பெய்துள்ளது என்றும், வினாடிக்கு 27.26 கன மீட்டர் வீதம் தண்ணீர் திறந்து விடப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், லாபோங் அணையின் இயல்பான அளவான 8.42 மீட்டர் உடன் ஒப்பிடும்போது தற்போது 8.81 மீட்டராக உள்ளதாகவும், லாபோங் அணையில் 90மிமீ மழை பெய்துள்ளதாகவும், வினாடிக்கு 1,378 கன மீட்டர் தண்ணீர் திறந்துவிடப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளின் போது அதிகாரிகளின் அறிவுரைகளை மக்கள் எப்போதும் கேட்க வேண்டும் என்றும், மக்களைப் பாதுகாக்கவும், இன்னும் கூடிய இழப்பை ஏற்படுத்தும் பேரழிவைத் தடுக்கவும் அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.