தலைநகரிலுள்ள செந்தூலின் ஜின்ஜாங் பாருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் மேற்கொண்ட சோதனையில், போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என நம்பப்படும் 27 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களில் சுமார் 19 பேர் குடியிருப்பின் ஜன்னல் வழியாக கூரையின் மீது ஏறி தப்பிச் செல்ல முயன்றனர், இருப்பினும் அவர்கள் போலீசாரிடம் சிக்கிக்கொண்டதால் அவர்களின் முயற்சி தோல்வியடைந்தது என்று, கோலாலம்பூர் காவல்துறையின் பதில் தலைவர் டத்தோ யஹாயா ஓத்மான் தெரிவித்தார்.
செந்தூல் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிராக, செந்தூல் மாவட்ட போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவுக் குழுவின் உளவுத்துறையின் தகவலைத் தொடர்ந்து, இந்த வளாகத்தில் சோதனை நடத்தப்பட்டது.
கோலாலம்பூர் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவியுடன் நேற்றுக் காலை 5 மணி முதல் இந்த நடவடிக்கையை காவல்துறை தொடங்கியது என்றார்.
“இந்த சோதனையில், போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 23 மற்றும் 40 வயதுக்குட்பட்ட 27 பேர் கைது செய்யப்பட்ட்னர். இவர்கள் அனைவரும் உள்ளூர்காரர்களாவர். கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக விசாரணைக்காக செந்தூல் மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்,” என்று அவர் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து RM5,944 மதிப்பிலான 59.44 கிராம் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் மற்றும் இரண்டு பெரோடுவா மைவி கார்கள், யமஹா Y15 மோட்டார் சைக்கிள், நகைகள், கைக்கடிகாரம் மற்றும் RM603 ரொக்கம் உள்ளிட்ட பிற சொத்துக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
“சிறுநீர் பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையில், அனைத்து சந்தேக நபர்களும் ஆம்பெடமைன் மற்றும் மெத்தாம்பேட்டமைனுக்கு சாதகமாக இருப்பதைக் கண்டறியப்பட்டதுடன், அவர்கள் நேற்று முதல் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்” என்று அவர் கூறினார்.
“இந்த கைது நடவடிக்கை மூலம், கடந்த ஆறு மாதங்களாக செந்தூல் பகுதியில் செயல்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலை நாங்கள் முறியடிக்க முடிந்தது,” என்று அவர் மேலும் கூறினார்.