பத்து பகாட்டிலுள்ள ஜாலான் குளுவாங், தாமான் ஆயிர் ஈத்தாம் என்ற இடத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில், 51 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார், அவரது கணவர் காயமடைந்தார்.
கண்ணாடி விற்கும் கடை வைத்திருக்கும் பாதிக்கப்பட்ட தம்பதியினர் நேற்று (ஏப்ரல் 9) இரவு 9.45 மணியளவில் ஸ்கூட்டரில் பயணம் செய்தபோது, விபத்துக்குள்ளானதாக பத்து பகாட்மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் இஸ்மாயில் டோல்லா கூறினார்.
“தம்பதியினர் ஒட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் சாலையைக் கடக்கும்போது, ஆயிர் ஈத்தாமிலிருந்து பாரிட் ராஜா நோக்கி வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதியது. இதில் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், அவரது கணவரும் மற்ற மோட்டார் சைக்கிள் ஓட்டியும் காயமடைந்தனர் என்று, அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக ஏசிபி இஸ்மாயில் மேலும் தெரிவித்தார்.