ஒற்றுமை அரசாங்கத்திற்கு சவால் விட எதிர்க்கட்சிகள் விரும்பினால், அது குறித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அவசர நிலையைப் பிரகடனம் செய்து நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஒத்திவைத்த முந்தைய பிரதமரைப் போல தாம் இல்லை என்று அன்வார் கூறினார். மாறாக யாருக்கு பலம் உள்ளது என்று பார்க்க வேண்டும் எனில் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளை சந்திக்க தாம் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.
“நீங்கள் ஒற்றுமை அரசாங்கத்திற்கு எதிராக ஒரு சவாலை முன்வைக்க விரும்பினால், அதை மே மாதம் நாடாளுமன்றத்தில் செய்யுங்கள்… ஆதரவு தருபவர்கள் எண்ணிக்கையில் எனக்கு நம்பிக்கை உள்ளது… இன்னும் 148 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
“பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டு வாருங்கள், நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்க நான் தயங்கமாட்டேன், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அனைத்து கௌரவ உறுப்பினர்களையும் (நாடாளுமன்றத்தின்) சந்திப்பேன்.
“இருப்பினும், ஒரு நிபந்தனையுடன், அதாவது இதுவே இறுதி அத்தியாயமாக இருக்க வேண்டும், ஏனெனில் நாம் நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவது மிக முக்கியம் ,” என்று அவர் கூறினார்.
“எதிர்க்கட்சிக்கு உண்மையாகவே பலம் இருந்தால் நான் நாடாளுமன்றத்தில் போராடத் தயாராக இருக்கிறேன்” என்று அவர் இன்று மலேசிய மடானி நோன்புப்பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் உரையாற்றும்போது பிரதமர் கூறினார்.
பெரிகாத்தான் நேஷனல் பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் புதிய பிரதமர் ஆவதற்கு போதுமான சட்டப்பூர்வ அறிவிப்புகளை (SDs) கொண்டுள்ளார் என்ற வதந்திகள் குறித்து அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.