செம்பூர்னா கடலில் முக்குளிப்பு செய்யும்போது சுற்றுலாப் பயணி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக 27 வயதான உள்ளூர் முக்குளிப்பு பயிற்றுநர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த மே 5 ஆம் தேதி மதியம் 1 மணியளவில், சொந்தமாக முக்குளிப்பு பயிற்றுவிக்கும் ஒரு பயிற்றுநரால் தான் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக சீனாவிலிருந்து வந்த சுற்றுலாப் பயணி ஒருவர் புகாரளித்ததாக செம்பூர்னா மாவட்ட பதில் காவல்துறை தலைவர், துணை ஆணையர் அரிஃப் அப்துல் ரசாக் கூறினார்.
பாதிக்கப்பட்டவர் சீனாவில் உள்ள தனது சொந்த ஊருக்குச் செல்வதற்கு முன்பு, குறித்த சீன நாட்டுப் பெண் செம்பூர்னா காவல்துறையில் புகார் அளித்தார் என்று, ASP ஆரிப் இன்று திங்கள்கிழமை (மே 8) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
குறித்த புகாரைத்தொடர்ந்து, நேற்று (மே 7 ) நள்ளிரவு 12.50 மணியளவில் செம்பூர்னா மாவட்டத்தின் நீர் கிராமத்தில் உள்ள வீட்டில் வைத்து அந்த முக்குளிப்பு பயிற்றுநர் கைது செய்யப்பட்டதாகவும், சந்தேகநபர் மே 11ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் மேலும் கூறினார்.
முன்னதாக பாதிக்கப்பட்டவருக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையேயான உரையாடல்களின் ஸ்கிரீன் ஷாட்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரால் முத்தமிடப்பட்ட சீன நாட்டுப் பெண்ணின் படங்கள் பேஸ்புக்கில் பெரிதும் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.