பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் ஆண்டுக்கு 4 முறை ரொக்க நிவாரணம் பெறலாம்: நட்மா (NADMA) அறிவிப்பு!

கோலாலம்பூர்:

மலேசியாவில் வெள்ளம், நிலச்சரிவு, தீ விபத்து மற்றும் கடல் அலைச்சீற்றம் போன்ற பேரிடர்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் (NADMA) ‘பாந்துவான் வாங் இஹ்சான்’ (Bantuan Wang Ihsan – BWI) நிதியுதவியை ஆண்டுக்கு நான்கு முறை வரை விண்ணப்பித்துப் பெறலாம் என அறிவித்துள்ளது.

இத்தகவலை நட்மாவின் சமூகம் மற்றும் சமூக மேம்பாட்டுப் பிரிவின் இயக்குநர் ஜெஃப்னி முஹமட் தெரிவித்துள்ளார்.

தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத் தலைவருக்கும் ஒருமுறைக்கு RM1,000 வழங்கப்படும். இதன் மூலம் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக RM4,000 வரை நிதியுதவி கிடைக்க வாய்ப்புள்ளது என்றார் அவர்.

மேலும் இந்த நிதியுதவியைக் கோருவதற்கு குறைந்தபட்சம் 3 மாதகால இடைவெளி இருக்க வேண்டும் என்றும், குறித்த 3 மாதக் காலக்கட்டத்திற்குள் ஒருவர் இரண்டு முறை பேரிடரால் பாதிக்கப்பட்டாலும், ஒருமுறை மட்டுமே BWI நிதியைக் கோர முடியும் என்றும், ஆனால் 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பாதிப்பு ஏற்பட்டால் அவர் புதிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

கடந்த 2025/2026 வடகிழக்கு பருவமழைக் காலத்தில், நாடு முழுவதும் 108,000 குடும்பத் தலைவர்களுக்கு மொத்தம் RM108 மில்லியன் வழங்கப்பட்டது. இது முந்தைய பருவமழைக்காலத்துடன் ஒப்பிடுகையில் (287,000 குடும்பங்கள் / RM287 மில்லியன்), இம்முறை பெரிய அளவிலான பேரிடர்கள் குறைந்ததால் பயனாளிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

அத்தோடு தற்காலிக நிவாரண மையங்களில் (PPS) வைக்கப்பட்டுள்ள QR குறியீட்டைச் (QR Code) ஸ்கேன் செய்து, myIBJKM அமைப்பின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் விவரங்களை எளிதாகவும் விரைவாகவும் பதிவு செய்து நிதியுதவியைப் பெறலாம் என்றும் அவர் கூறினார்.

தொண்டு நிறுவனங்களுடன் (NGO) இணைந்து ‘சமூகம் சார்ந்த பேரிடர் இடர் மேலாண்மை’ (CBDRM) பயிற்சிகள் மூலம், பேரிடருக்கு முன்பும் பின்பும் பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here