ஆயிர் ஈத்தாம் மற்றும் தெலுக் பஹாங் ஆகிய அணைகளின் நீர் இருப்பு இன்னும் 50 விழுக்காட்டுக்கும் குறைவாக இருப்பதால், அங்கு மேக விதைப்பு நடவடிக்கைகளின் இரண்டாம் கட்டத்திற்கு பினாங்கு நீர் வழங்கல் கழகம் பரிந்துரைக்கிறது.
தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம், தேசிய விமானப்படை, மலேசிய வானிலை ஆய்வு மையம் மற்றும் பினாங்கு நீர் ஒழுங்குமுறை அமைப்பு ஆகியவற்றின் ஆதரவு மற்றும் உதவியுடன், கடந்த மே 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் முதல் மேக விதைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனால் ஆயிர் ஈத்தாம் அணையில் 8.5 மிமீ மழையும், தெலுக் பகாங் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 19.5 மிமீ மழையும் பதிவாகியுள்ளது என்றும் பினாங்கு நீர் வழங்கல் கழகத்தின் தலைமை செயல் அதிகாரி கே.பத்மநாதன் கூறினார்.
“மேக விதைப்பு மேற்கொள்ளப்பட்ட நாட்களில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது, இருப்பினும் அணைகளை நிரப்ப அதிக மழை தேவை. எனவே தற்போது நிலவும் கடும் வெப்பத்தின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, அடுத்த மழைக்காலம் வருவதற்கு முன்பு தீவில் உள்ள இரண்டு அணைகளும் வறண்டு போவதைத் தடுக்க செய்யக்கூடிய அனைத்தையும் செய்ய வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.