பினாங்கு மாநில அரசு ஜப்பானிய விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மாநிலம் மற்றும் ஜப்பானிய நகரங்களுக்கு இடையேயான நேரடி விமானசேவைக்குரிய சாத்தியக்கூறு தொடர்பில் ஆய்வை மேற்கொள்ளும் என்று, மாநில சுற்றுலா மற்றும் படைப்பாற்றல் பொருளாதாரக் குழுவின் தலைவர் யோஹ் சூன் ஹின் தெரிவித்தார்.
ஜப்பானிய விமான நிறுவனங்களுடன் இணைவதற்கும் புதிய விமானப் பாதைகளை அடையாளம் காண்பதற்கும் மாநில அரசு முன்முயற்சி எடுத்துள்ளதாகவும், இதன்முலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை மலேசியாவின் வடக்குப் பகுதிக்குக் கொண்டு வருவதில் இம்முயற்சி மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறினார்.
“இதை செயற்படுத்துவதற்கான அனைத்து வழிகளையும் ஆராய்வதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஜப்பான் நாடு, குறிப்பாக, வலுவான மற்றும் வளரும் பொருளாதாரம் மற்றும் செழிப்பான சுற்றுலாத் துறையுடன் ஒரு நம்பிக்கைக்குரிய சந்தையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
” இந்த ஆண்டு சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகம் நிர்ணயித்த இலக்கான 16.1 மில்லியன் வெளிநாடு வருகையாளர்களை எட்டுவதற்கு, இந்த புதிய பினாங்கு-ஜப்பான் நேரடி விமானப் பாதை முயற்சி சிறந்த பங்களிக்கும்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.