வீடுகளில் சிவப்பு வண்ணப்பூச்சு தெளித்ததற்காக இரண்டு சகோதரர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிக்கு தலா 26 நாட்கள் சிறைதண்டனை விதித்து, சிரம்பான் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
குற்றம் சாட்டப்பட்ட சகோதரர்கள் முஹமட் லத்திவ் லைலி, 31, மற்றும் முஹமட் ருஸ்டி சாஃபுபான் லைலி, 29; மற்றும் 29 வயதான அமீருல் ரிதுவான் ஷம்சுதீன் ஆகிய மூவரும், உரிமம் பெறாத கடன் வழங்குநரால் இந்தச் செயல்களைச் செய்ய பணியமர்த்தப்பட்டதாக, நீதிபதி நோர்ஷிலா கமாருதின் முன் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
முதல் குற்றச்சாட்டாக, ஏப்ரல் 22 ஆம் தேதி அதிகாலை 5.42 மணிக்கு தாமான் பிங்கிரான் கோல்ஃப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குற்றத்தைச் செய்ததாக மூவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
வீட்டின் வளாகம் மற்றும் சுற்றுச்சுவரில் சிவப்பு பெயிண்ட் அடிப்பதைத் தவிர, கடனைத் திருப்பிச் செலுத்த மறுத்தால் இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம் என்று கடனாளியை மிரட்டும் குறிப்பையும் விட்டுச் சென்றனர்.
இரண்டாவது, அதே குற்றத்தை அதே காலை 5.30 மணியளவில் தாமான் பரோய் ஜெயாவில் உள்ள ஒரு வீட்டில் செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
கடனை திருப்பிச் செலுத்த வேண்டும், இல்லையெனில் அடுத்த முறை பெட்ரோலைத் தெளிப்போம் என்று மிரட்டும் குறிப்பையும் விட்டுச் சென்றுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் எந்தவொரு வக்கீலாலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை.
நீதிமன்றம் பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு இதுபோன்ற குற்றங்களைச் செய்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும் என அரசு வக்கீல் கேட்டுக்கொண்டார்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு முதல் குற்றத்திற்காக 12 நாட்களும், இரண்டாவது குற்றத்திற்காக 14 நாட்களும் சிறைத்தண்டனையை வழங்கிய நீதிபதி, தண்டனையை தொடர்ச்சியாக அனுபவிக்க உத்தரவிட்டார். மேலும் இவ்வாறான சட்ட விரோத செயல்களில் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தினார்.