சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட கொள்கலன் கப்பல் ஒன்று நேற்று காலை எரிசக்தியை இழந்து நியூசிலாந்து கடற்பரப்பில் மிதக்கத் தொடங்கியதால் அவசரகால உதவி கோரியுள்ளது. ஓராண்டுக்குள் மூன்றாவது முறையாக அக்கப்பல் செயல் இழந்துள்ளது.
66,000 டன் எடையுள்ள ஷிலிங் என்ற அந்தக் கப்பலை பாதுகாப்பான இடத்திற்கு இழுத்துச் செல்ல நியூசிலாந்து அதிகாரிகள் மீட்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
சிங்கப்பூர் நேரப்படி நேற்று மாலை 4 மணிக்கு, கப்பல் தெற்குத் தீவின் கடற்கரையில் காணப்பட்டதாக கப்பல் கண்காணிப்பு சேவையான மரின் டிராஃபிக் தெரிவித்து.
24 ஊழியர்களைக் கொண்ட கப்பலுடன் தொடர்பில் இருப்பதாகவும், கப்பலை இழுத்து வர உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் (சிங்கப்பூர் நேரப்படி மதியம் 2 மணி) இழுவைக் கப்பல் சென்றதாகவும் நியூசிலாந்தின் கடல்துறை பாதுகாப்பு ஆணையமான ‘மரின்டைம் நியூசிலாந்து’ கூறியது.
சிங்கப்பூரைத் தளமாகக்கொண்ட கப்பல் சேவை நிறுவனமான டிபி வேர்ல்டின் ஃபீடர்டெக்கிற்கு சொந்தமான இக்கப்பல் 2005ல் தயாரிக்கப்பட்டது.
தெற்குத் தீவின் குறுகிய மணல் குன்றான ஃபேர்வெல் ஸ்பிட்டிலிருந்து 22 கடல் மைல் தொலைவில் கப்பல் எரிசக்தியை இழந்ததால், பல ஹெலிகாப்டர்களும் ஒரு விமானமும் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டன என்று நியூசிலாந்து ஹெரால்டுக்கு நியூசிலாந்து பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் அளித்த பேட்டியில் கூறினார்.
அப்போது கப்பல் நியூசிலாந்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி திரும்பிக்கொண்டிருந்தது.
“எரிசக்தியை இழந்த பின்னர் கப்பல் கடலில் தள்ளாடுகிறது,” என்றார் அவர். இழுவைக் கப்பல் செல்வ தற்கு முன்னதாக அது கரை யொதுங்கும் அபாயம் இல்லை என்று அதிகாரிகள் முன்னர் கூறியிருந்தனர்.