பேராக் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சகம் நடத்திய சோதனையில், 31,000 லிட்டர் மானிய எரிபொருளைக் கைப்பற்றியதில், கோலா காங்சாரில் மரக்கட்டை என்ற போர்வையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல் கடத்தல் கும்பலின் குட்டு வெளிப்பட்டது.
இந்தக் கும்பலின் இரகசிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மோப்பம் பிடிக்காமல் தடுக்க, அவர்கள் ஒரு தகவல் தருபவரை நியமித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று, பேராக் அமைச்சகத்தின் இயக்குனர் டத்தோ கமாலுடின் இஸ்மாயில் கூறினார்.
காலை 10.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ஒரு டேங்கர் லோரி மற்றும் மாற்றியமைக்கப்பட்ட வேன் மற்றும் சுமார் 101,400 ரிங்கிட் மதிப்பிலான மோசடி நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.
“சோதனை நடத்தப்பட்டபோது, வளாகத்தின் உரிமையாளர் யாரும் அந்த இடத்தில் இல்லை, மேலும் சோதனைகளில் எரிபொருள் இரண்டு தொட்டிகளில் சேமிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.
“இந்தக் கும்பல் கோலா காங்சரைச் சுற்றியுள்ள பல பெட்ரோல் நிலையங்களில் மானிய விலையில் டீசல் எரிபொருளை வாங்கிய பின்னர், அது இறுதியில் தொழில்துறையினருக்கு விற்கப்படும்” என்று அவர் நேற்று புதன்கிழமை (மே 17) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இது தொடர்பான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் அமைச்சு மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் எனவும், அவை குறித்த கும்பலுடன் இணக்கமாக இருப்பது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.