பேராக்கில் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஐவர் கைது

ஈப்போ, மஞ்சாங்கில் போதைப்பொருள் கடத்தல்காரர்களால் போதைப்பொருள் செயலாக்க ஆய்வகமாகவும், பொட்டலமிடும் இடமாகவும் பயன்படுத்தப்பட்ட ஒரு வீட்டில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், சுமார் இரண்டு இலட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

குறித்த வீட்டில் நடந்த சோதனையின் போது, 23 முதல் 52 வயதுடைய நான்கு சந்தேக நபர்களை (அனைவரும் உள்ளூர்வாசிகள்) கைது செய்ததுடன், 14.9 கிலோகிராம் ஹெராயின் மற்றும் போதைப்பொருள் பதப்படுத்தப் பயன்படும் உபகரணங்களையும் போலிசார் பறிமுதல் செய்தனர் என்று, பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹசன் பஸ்ரி கூறினார்.

இந்தக் கும்பல் மார்ச் மாதத்திலிருந்து போதைப்பொருள் பதப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

நான்கு பேரின் கைதினைத் தொடர்ந்து , தைப்பிங்கின் போகோக் அஸ்ஸாமில் 25 வயதுடைய கும்பலின் மற்றொரு உறுப்பினரை கைது செய்ய வழிவகுத்தது என்று முகமட் யூஸ்ரி கூறினார்.

சந்தேகத்திற்குரிய ஐந்து நபர்களுக்கும் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனைகளின் அடிப்படையில், அவர்களின் சோதனை முடிவுகள் எந்த வகை போதைப்பொருளுக்கும் எதிர்மறையாக இருந்தன, ஆனால் ஐவரில் நான்கு பேர் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான முந்தைய பதிவுகளைக் கொண்டுள்ளனர்.

“சோதனையின் போது ஒரு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தின் மொத்தப் பெறுமதி RM239,727 ஆகும்.

ஐந்து சந்தேக நபர்களும் ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என்றும், ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here