மலேசியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக நம்பப்படும் 18 மியன்மார் நாட்டவர்களை பொது நடவடிக்கைப் படையின் (GOF) 9வது பட்டாலியன் நேற்று தும்பாட், ஜாலான் புனுட் சாராங் புருங் என்ற இடத்தில் கைது செய்தது.
அனைத்து மியன்மார் நாட்டவர்களும் உள்ளூர்காரர் இருவரும் வேனில் பயணித்தபோது கைது செய்யப்பட்டனர் என்று, கிளாந்தான் காவல்துறைத் தலைவர், டத்தோ முஹமட் ஜாக்கி ஹாருன் தெரிவித்தார்.
“இரவு 7.15 மணியளவில் PGA9 பணியாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் சென்ற அந்த வேனை ஒரு பள்ளியின் முன்பு நிறுத்தினார்கள்.
“வேனை நிறுத்தியபோது, உள்ளூர்காரர்கள் இரண்டு பேரும் தப்பிக்க முயன்றனர். எவ்வாறாயினும், அவர்களில் ஒருவர் கைகலப்பின் பின்னர் கைது செய்யப்பட்டார், மற்றைய சந்தேக நபர் அருகிலுள்ள புதர்களுக்கு தப்பிச் சென்றார், ”என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சோதனையின் போது, செல்லுபடியாகும் எந்த ஆவணங்களும் இல்லாத 13 ஆண்கள் மற்றும் 5 பெண்கள், கைது செய்யப்பட்டனர் என்று முஹமட் ஜாக்கி கூறினார்.
“இவர்கள் அனைவரும் தாய்லாந்தில் இருந்து பதிவு செய்யப்படாத பாதை வழியாக இந்த நாட்டிற்குள் நுழைந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட வாகனம் மேலதிக நடவடிக்கைக்காக கோலா ஜம்பு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.








