செராஸில் வீடுடைத்து கொள்ளையிட முயன்ற இருவர் போலீசாரால் சுட்டுக் கொலை

இன்று அதிகாலை செராஸில் உள்ள தாமான் சுப்ரீம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து, கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக நம்பப்படும் இருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

குறித்த சந்தேக நபர்கள் காவல்துறையினரை பாராங் கத்தியால் தாக்க முயன்றதால், தற்காப்புக்காக போலீசார் பல முறை துப்பாக்கிச் சூடு நடத்த நேரிட்டது என்று, கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர், டத்தோ முகமட் ஷுஹைலி முகமட் ஜெய்ன் கூறினார்.

கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட மொத்தம் நால்வரில் இரண்டு கூட்டாளிகள் தப்பியோடிய நிலையில், 30 வயதுக்குட்பட்ட இருவர் துப்பாக்கிச் சூட்டில் இறந்ததாகவும், இருவரும் வெளிநாட்டவர்கள் என்று நம்பப்படுவதாகவும் அவர் கூறினார்.

அவரின் கூற்றுப்படி, கோலாலம்பூர் காவல் படைத் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அதிகாலை 3.30 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தவேளை, நான்கு சந்தேக நபர்களின் செயல்பாடுகளை கண்காணித்து, பின்தொடர்ந்தனர்.

“அவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், கத்திகள் மற்றும் இரும்பு வெட்டிகள் போன்ற சில திருட்டு கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும், “போலி பதிவு எண் கொண்டது என நம்பப்படும் காரைப் பயன்படுத்தி தப்பி ஓடிய இருவரை போலீசார் தேடிவருவதாகவும், சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கேன்சிலர் துவாங்கு முஹ்ரிஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் முகமட் ஷுஹைலி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here