ஜோகோவி என்று அழைக்கப்படும் இந்தோனேசியாவின் அதிபர் ஜோகோ விடோடோ இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ வருகையாக நேற்று மலேசியா வந்தடைந்தார்.
பயணத்தின் ஒரு பகுதியாக இன்று, இந்தோனேசியர்கள் அதிகம் பணிபுரியும் ஜாலான் ராஜா போட், சௌவ் கிட் சந்தைக்கு பிரதமர் அன்வார் இப்ராஹிமுடன் வருகை தந்தார், அவர்களுக்கு சுமார் 1,000 வர்த்தகர்கள் மற்றும் 1,400 பார்வையாளர்களால் சிறந்த வரவேற்பு வழங்கப்பட்டது.
இன்று மதியம் 12.35 மணியளவில் சௌவ் கிட் சந்தைக்கு வந்த ஜோகோவி, இந்தோனேசியாவில் இருந்து வந்த வர்த்தகர்கள் உள்ளிட்டவர்களுடன் நட்புடன் பழகினார்.
ஜோகோவி அங்கிருந்த வர்த்தகர்களை வாழ்த்தியபோது , கூட்டம் ஆரவாரம் செய்தது, சிலர் உற்சாகத்தால் கண்ணீர் வடித்தனர். தமது நாட்டு அதிபருக்கு மரியாதை தெரிவிக்கும் முகமாக இந்தோனேசிய தேசிய கீதத்தையும் பாடி, அவருக்கு தமது நாட்டுப்பற்றை வெளிக்காட்டினர்.
மலேசியாவின் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் மற்றும் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஜாம்ப்ரி அப்துல் காதிர் ஆகியோரும் இந்த விஜயத்தில் பங்கேற்றனர்.