கட்சியை உண்மையாக நேசித்தால், கைரி ஜமாலுடின் மீண்டும் அம்னோ கட்சிக்கு திரும்ப வேண்டும் என்று டாக்டர் முகமட் அக்மல் சாலே தெரிவித்துள்ளார்.
“நான் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 9) இரவு வானொலியில் கைரி பேசியத்தைக் கேட்டுக் கொண்டிருந்தேன், அவர் அம்னோவை இன்னும் நேசிக்கிறார் என்று கூறினார்.
அதனால் அம்னோ முன்னாள் இளைஞர் தலைவர் அம்னோவுடன் இருப்பார் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது என்று, இன்று சனிக்கிழமை (ஜூன் 10) நடைபெற்ற அம்னோ பொதுச் சபையின் போது நடந்த செய்தியாளர் கூட்டத்தில் நடப்பு இளைஞர் அணித் தலைவர் டாக்டர் முகமட் அக்மல் சாலே கூறினார்.
ஒரு காலத்தில் அம்னோ இளையோர் அமைப்பை வழிநடத்திய கைரி, ஜனவரி 27 அன்று கட்சியால் நீக்கப்பட்டார்.
பின்னர் உள்ளூர் வானொலி நிலையமான ஹாட் எஃப்எம் மூலம் அவர் டீஜேயாக பணியமர்த்தப்பட்டார்.
கடந்த மே மாதம், பெர்சாத்து தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின், கைரி தமது கட்சியில் சேர விரும்பினால் அவருக்கு உச்ச மன்ற உறுப்பினர் பதவியை வழங்க தயார் என்று கூறியிருந்தார்.
இதற்கிடையில், டாக்டர் அக்மல் மேலும் கூறுகையில், அம்னோவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்லது பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் உட்பட அம்னோவை நேசிக்கும் அனைவருக்கும் அதன் கதவு திறந்திருக்கும் என்றார்.
“இப்போது அம்னோவை நேசிப்பவர்கள் ஒரே மேசையில் அமர்ந்து ஒன்றுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.