2013 மற்றும் 2015 க்கு இடையில் புக்கிட் வாங் பர்மா, வாங் கிளியான், பாடாங் பெசார் ஆகிய இடங்களில் இரண்டு மியன்மார் நாட்டினரை உள்ளடக்கிய புலம்பெயர்ந்தோரை கடத்தியதாக நான்கு தாய்லாந்து ஆடவர்களுக்கு எதிராக இன்று கங்கார் அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியாக குற்றம் சாட்டப்பட்டது.
அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு, நீதிபதி முசிரி பீட் முன்நிலையில் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் வாசிக்கப்பட்டபோது, ஜெஹ்பா லாபி-இ, 56, சோம்போன் ஏ-டாம், 51, அருண் கயோஃபைனோக், 30, மற்றும் அம்ரீ நெசலேஹ், 58 ஆகிய நான்கு பேரும், குற்றச்சாட்டைப் புரிந்துகொண்டு தலையசைத்தனர்.
எவ்வாறாயினும், ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோரின் கடத்தல் தடுப்புச் சட்டம் 2007 இன் கீழ் இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தின் வரம்பிற்குள் உட்பட்டுள்ளதால், எந்த மனுவும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றப்பத்திரிகையின்படி, பிப்ரவரி மற்றும் ஏப்ரல் 2013 க்கு இடையில் புக்கிட் வாங் பர்மா, வாங் கிளியான், பாடாங் பெசார் ஆகிய இடங்களில் ஜெதுல் இஸ்லாம் என அழைக்கப்படும் மியன்மார் நபரை கடத்தியதாக ஜெஹ்பா லாபி-இ, சோம்போன் ஏ-டாம் மற்றும் அருண் கயோஃபைனோக் ஆகியோர் மீது தலா ஒருவர் குற்றம் சாட்டப்பட்டார்.
மற்ற குற்றம் சாட்டப்பட்ட அம்ரீ நெசலேஹ் மீது 2014 ஆகஸ்ட் மற்றும் மார்ச் 2015 க்கு இடையில் அதிகாலை 5.30 மணியளவில் மற்றொரு மியன்மார் நபரான முகமட் பெலாலை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோரின் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 26A இன் கீழ் கட்டமைக்கப்பட்ட குற்றச்சாட்டில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
இவ்வழக்கில் பிணையை அனுமதிக்காத நீதிமன்றம், வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கான அடுத்த செவிமடுப்பு தேதியாக ஜூலை 25-ஆம் தேதியை நிர்ணயித்தது.
மே 2015 இல், மலேசியா-தாய்லாந்து எல்லையில் உள்ள வாங் கிளியானில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் சம்பந்தப்பட்ட முகாம்கள் மற்றும் 139 புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த சம்பவம் உள்ளூர் மற்றும் அனைத்துலக சமூகங்களிடமிருந்து பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்தியிருந்தது.
மனிதக் கடத்தல் கும்பலால் மியன்மார் மற்றும் வங்காள தேசம் போன்ற நாடுகளிலிருந்து கடத்தப்படுபவர்களை குறித்த புதைகுழிகளில் அடக்கம் செய்யப்பட்டதை அரசு சிறப்பு விசாரணைக்குழு கண்டறிந்தது.
விசாரணைகளின் அடிப்படையில், ஜன. 6, 2017 அன்று 10 தாய் நபர்களை நாடு கடத்துவதற்கான கோரிக்கையை மலேசிய அரசாங்கம் தாய்லாந்து அரசாங்கத்திடம் சமர்ப்பித்தது, மேலும் நாடு கடத்தும் செயல்முறையில் ஈடுபட்டுள்ள அனைத்து நபர்களையும் கண்டுபிடிக்க இரு நாடுகளும் முயற்சிகளை மேற்கொண்டன.
இருப்பினும் மலேசியா மற்றும் தாய்லாந்து இடையேயான ஒத்துழைப்பின் விளைவாக குறித்த நால்வரும் வெற்றிகரமாக மலேசியாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக நேற்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.










