மின்னணுக் கழிவுத் தொழிற்சாலையில் மிரட்டிப் பணம் பறிப்பு புகார்: இன்ஸ்பெக்டர் முதல் கான்ஸ்டபிள் வரை 10 போலிஸ் அதிகாரிகள் கைது!

கோலாலம்பூர்:

பினாங்கு, தாசிக் கெலுகோர் பகுதியில் உள்ள மின்னணுக் கழிவு (E-waste) பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் மிரட்டிப் பணம் பறித்த குற்றச்சாட்டின் பேரில், மலேசிய அரசுக் காவல்துறையின் பொதுச் சேவைப் படையைச் (GOF / PGA) சேர்ந்த 10 அதிகாரிகள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 10 போலீசாரும் கெடா, கூலிம் பகுதியில் உள்ள பொதுச் சேவைப் படையின் 2-வது பட்டாலியனைச் சேர்ந்தவர்கள் என்றும், 30 முதல் 40 வயதுடைய இவர்களில் கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர் தரம் வரையிலான அதிகாரிகள் அடங்குவர் என்று, புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் (செயல்பாடுகள்) துணை இயக்குநர் டத்தோ முகமத் அப்துல் ஹலீம் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

அவர்கள் அனைவரும் ஒரு நாள் தடுப்புக் காவலுக்குப் பின் நேற்று போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும், காவல்துறையில் உள்ள அதிகாரிகள் யாரேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால், எந்தவொரு பாரபட்சமுமின்றி துறை ரீதியிலான மற்றும் சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இச்சம்பவம் தொடர்பாகக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 384 (மிரட்டிப் பணம் பறித்தல்)-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுத் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here