பெட்டாலிங் ஜெயா: முன்னாள் மஇகா துணைத் தலைவர் சி சிவராஜ், பாரிசான் நேஷனல் உறுப்புக் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். ஒரு செனட்டராகவும் இந்திய சமூகத்தின் தலைவராகவும், “குறிப்பாக மஇகா தலைமையிலிருந்து” தனது பொறுப்புகளை எந்தவித இடையூறும் இன்றி மேற்கொள்ள விரும்பியதால், கட்சியிலிருந்து விலகுவதாக சிவராஜ் கூறினார்.
மஇகா தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் தலைமையின் கீழ் பல “சம்பவங்கள்” நடந்ததாகவும், அவை தனது உறுப்பினர் பதவியை துறக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார். சிவராஜை எப்ஃஎம்டி தொடர்பு கொண்ட போது விக்னேஸ்வரனுக்கு கடிதம் அனுப்பியதை உறுதிப்படுத்தினார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு மஇகாவில் இணைந்ததில் இருந்து, கட்சியின் போராட்டங்களுக்கு மிக உயர்ந்த அர்ப்பணிப்பை அளித்துள்ளேன். கட்சியில் எனது பல்வேறு பதவிகளில் என்னால் முடிந்ததை கட்சிக்கும் சமூகத்திற்கும் அளித்துள்ளேன்.
டான்ஸ்ரீ (விக்னேஸ்வரன்), தற்போதுள்ள கட்சித் தலைமைக்கு நான் அச்சுறுத்தலாகக் கருதப்படுவதால், இந்தத் தீர்மானம் எனக்கும், அதைவிட முக்கியமாக கட்சிக்கும் இந்த நேரத்தில் சிறந்தது என்று தனிப்பட்ட முறையில் நான் உணர்கிறேன்.
முரண்பாடான கருத்துக்கள் மற்றும் அணுகுமுறைகளால் கட்சி பிளவுபடுவதை நான் உண்மையில் விரும்பவில்லை என அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு, கட்சியின் மத்திய செயற்குழுவில் (CWC) இருந்து சிவராஜ் நீக்கப்பட்டார். இருப்பினும் காரணம் வெளியிடப்படவில்லை.
மஇகாவின் 2021 கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் தோல்வியடைந்த பின்னர் விக்னேஸ்வரனால் மத்திய செயலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியில் 597 வாக்குகள் பெரும்பான்மையுடன் சிவராஜ் வெற்றி பெற்றார். இருப்பினும், 2018 ஆம் ஆண்டு தேர்தலின் போது ஊழல் செய்ததற்கான ஆதாரங்களைக் காட்டி, அவரது வெற்றியை நீதிமன்றம் ரத்து செய்தது.
சிவராஜ் கடந்த ஆண்டு பொதுத் தேர்தலில் படாங் செராய் தொகுதியில் போட்டியிடத் திட்டமிடப்பட்டார். ஆனால் பக்காத்தான் ஹராப்பான் (PH) வேட்பாளர் எம் கருப்பையா தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்பே இறந்ததால் அந்த இடத்திற்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
PH மற்றும் பாரிசான் நேஷனல் பின்னர் ஒற்றுமை அரசாங்கத்தில் உறுப்பு கட்சியாக மாறியதால், அவர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்று PH வேட்பாளரை ஆதரிக்க ஒப்புக்கொண்டார். இருப்பினும் பெரிகாத்தான் நேஷனல் தொகுதியை வென்றது. இந்த ஆண்டு மார்ச் மாதம் சிவராஜ் செனட்டராக நியமிக்கப்பட்டார்.





















