மஇகாவில் இருந்து விலகிய சிலாங்கூர் மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் டி. புனிதன், தேசியக் கூட்டணியில் சேருவார் என்று கூறப்படுகிறது.
மஇகா முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர் புனிதனின் முடிவு குறித்து கருத்துரைக்கும்படி கேட்டபோது மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் இதுகுறித்து விளக்கமளித்தார். இரு தினங்களுக்கு முன்பு புனிதன் என்னை வந்து சந்தித்தார். அரசியல் குறித்தும் அவருடைய எதிர்காலம் குறித்தும் நாங்கள் விரிவாக விவாதித்தோம்.
இந்தச் சந்திப்பின்போது மஇகாவில் இருந்து விலக விரும்புவதாக புனிதன் சொன்னார். தேசியக் கூட்டணியுடன் சேர்ந்து தமது அரசியல் பணியைத் தொடரப்போவதாக அவர் கூறினார் என்று விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
புனிதனின் முடிவை நான் ஏற்றுக் கொண்டேன். தேசியக் கூட்டணியில் சேரப்போகும் புனிதன் வெற்றிபெற வாழ்த்துகிறேன் என்றும் அவர் சொன்னார்.
ஏற்கெனவே மஇகா முன்னாள் தேசிய உதவித் தலைவர் டத்தோ சிவராஜ் அக்கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தார்.
மஇகாவில் இருந்து விலகுவதுதான் என்னைப் பொறுத்தவரையில் சிறந்த முடிவாக இருக்கும் என்பதால் அக்கட்சியை விட்டு விலகுவதாக மேலவை உறுப்பினருமான சிவராஜ் கூறியிருந்தார்.