விரைவில் நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலின் போது, குற்றங்கள் நடைபெறலாம் என நம்பப்படும் 20 இடங்களில் கெடா காவல்துறை கண்காணிப்பை முடுக்கிவிடவுள்ளது.
இந்த நடவடிக்கையானது பணியில் இருக்கும் காவலர்களுக்கு வசதியாகவும், அனைத்து தரப்பினரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கிலும் மேற்கொள்ளப்படும் என்று, மாநில காவல்துறை தலைவர், டத்தோ பிசோல் சாலே கூறினார்.
“கெடாவில் உள்ள 36 மாநிலத் தொகுதிகளில் 20 இடங்கள் பரபரப்பானவையாகவும், குற்றங்கள் நடைபெறலாம் எனவும் நம்பப்படும் இடங்களாக உள்ளன. அதற்காக இந்த இடங்களில் பெரிய சண்டை அல்லது தீவிர நிகழ்வுகள் நடக்கும் என்று அர்த்தமல்ல, பொதுமக்கள் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் என்று, இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 2) கெடா காவல் படைத் தலைமையகத்தில் நடைபெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் கூறினார்.